Monday, September 12, 2011

குட்டிப் பாப்பாவுக்கொரு தேசியகீதம்: மழலைப் பாடல்

 
தமிழ் என்பதொரு மொழியம்மா!
இத்தரணியின் முதல் ஒளியம்மா!
தமிழ் ஒரு ஆன்ற வெளியம்மா!                   
மொழி பல ஈன்ற மொழியம்மா!

தொன்மைப் பசுமைக் கிளியம்மா!
அதைத் தோளில் ஏற்றிக் களியம்மா!
பொங்கு தமிழொரு ஆழியம்மா!                   
தங்கமே உனக்கொரு தோழியம்மா!

எண்ணம் பிறக்கும் வழியம்மா!
திண்ணம் கொடுக்கும் மொழியம்மா!               
நம் சிந்தை செதுக்கும் உளியம்மா!
உன் தந்தை தாயென மொழிஅம்மா!

கற்பனை வளர்க்கும் வழியம்மா!
சொற்சுளை தளிர்க்கும் வெளியம்மா!
அறிவு செழிக்கும் வழியம்மா!
ஆற்றல் கொழிக்கும் மொழியம்மா!

சுவாசம் நிகழ்த்தும் வளியம்மா!
நேசம் முகிழ்க்கும் வழியம்மா!
அறியாமை குடிக்கும் ஒளியம்மா!
மூடமை வடிக்கும் வழியம்மா!                                                  

உண்மை இதுவே தெளியம்மா!
தமிழ் தமிழெனப் பொழியம்மா!
தமிழ்நம் உயிரென மொழியம்மா!
இத்தரணியில் பயிரெனெச் செழியம்மா!

No comments:

Post a Comment